February 26, 2019 தண்டோரா குழு
பார் உரிமங்களை புதுப்பிப்பதை நிறுத்திவைக்க கோரிய வழக்கில் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடையில் பிப்ரவரி 21 ம் தேதி வெளியான பார்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கூறிய டெண்டரை ரத்து செய்ய கோரி மதுரையை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ் சுந்தர் அமர்வு கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க ஆதார் கார்டை ஏன் கட்டாயமாக்க கூடாது? டாஸ்மாக் கடை திறப்பு நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் 10 மணிவரை என ஏன் மாற்ற கூடாது? தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை முழுவதும் ஏன் மூடக்கூடாது? டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்வதை மட்டும் வைத்துக்கொள்ளலாமே? என உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மதுக்கடைகளில் சிறு வயது உள்ளவர்களுக்கு மது விற்பதால், சிறு வயது குற்றவாளிகள் அதிகரிக்கின்றனர் என்பதால், இதனை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும் பள்ளி மாணவ மாணவியர்கள் கூட சீருடை அணிந்து மது குடிக்கும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வருகிறது. இந்த அவலத்தை போக்குவதற்குரிய பொறுப்புணர்வும் அரசுக்கு தேவை என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.மேலும் இந்த பார் உரிமங்களை புதுப்பிப்பதை நிறுத்திவைக்க கோரிய வழக்கில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மார்ச் 12-ல் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்திரவு பிறப்பித்துள்ளது.