June 16, 2018
தண்டோரா குழு
பேரறிவாளன் உட்பட 7 பேரின் கருணை மனுவை ஜனாதிபதி மீண்டும் ஒரு முறை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத அரசு எனவும்,அரக்கர்களின் ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது எனவும் தெரிவித்தார்.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடிக்கு நேரில் சென்று மக்களிடம் அவர்களின் பிரச்சினை குறித்து பேச வேண்டும்.நேற்று மட்டும் மக்கள் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைத்திருந்தால் 2 நாளில் இந்த ஆட்சி முடிவுக்கு வந்திருக்கும்.தற்போது இந்த அரசின் ஆயுட்காலம் கொஞ்சம் நாட்களுக்கு நீட்டிக்கப்படுள்ளது.அடுத்து பொதுதேர்தல் நடைபெற்றால் மாபெரும் வெற்றி பெறுவோம்.
சோனியா,ராகுல்,பிரியங்கா போன்றவர்களே எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில்,பேரறிவாளன் உட்பட 7 பேரின் கருணை மனுவை பரிசீலனை செய்து ஜனாதிபதி விடுதலை செய்திருக்கலாம்.மீண்டும் 7 பேரின் கருணை மனுவை ஜனாதிபதி ஒரு முறை பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
18 எம்.எல்.ஏ தொடர்பான வழக்கில்,3 வது நீதிபதியிடம் வழக்கை வாபஸ் வாங்க மனு தாக்கல் செய்தால் தொகுதியில் இடைத்தேர்தல் வரும்,அப்போது நம் பலத்தை நிரூபிப்போம் என்று தங்க தமிழ்ச்செல்வன் என்னிடம் கூறினார்.அதற்கு சரி என்று அவருக்கு ஓப்புதல் கூறியுள்ளேன் எனவும், மற்ற எம்.எல்.ஏக்கள் நீதிமன்றம் மூலமே சட்டநடவடிக்கை தொடரலாம் என தெரிவித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.3 வது நீதிபதி நியமிக்கப்பட்ட பின்னர் அவரிடம் தங்க தமிழ்செல்வன் மனு தாக்கல் செய்வார் எனவும் அவர் தெரிவித்தார்.
சேலம் சென்னை 8 வழிசாலையில் முதல்வரின் உறவினர்களுக்கு வேலைகளை கொடுக்கின்றார். பின்னர் பிரச்சினை வந்தால் முதல்வர் அதை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.8 வழிச்சாலை விவகாரத்தில் சேலம் மக்களே எதிர்ப்பாகத்தான் உள்ளனர்.ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன எனவும்,முதல்வருக்கு எதிராக சேலம் மக்கள் இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
காவல்துறையை வைத்து போராடுபவர்கள் கைது செய்யப்படுவதாகவும்,தூத்துக்குடியில் இன்னும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் எனவும் குற்றம் சாட்டினார்.அமமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் விரும்பாத எந்த திட்டமும் நிறைவேற்றப்படாது.
அம்மா வழியில் ஆட்சி என கூறிக்கொண்டு கோமாளித்தனமாக பேசுகின்றனர்.ஜெயக்குமாரிடம் என்னை சேர்த்துகொள்ளும்படி யார் கேட்டார்கள் என தெரியவில்லை என கூறிய அவர்,யாருக்கோ பயந்துகொண்டு அவர்கள் செயல்படுகின்றனர்.தமிழகம் முழுவதும் தேர்தல் வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
மக்கள் ஆட்சியாளர்களை புறந்தள்ளிவிட்டனர் என தெரிவித்த அவர்,கூட்டம் போட காரணம் தேடி கூட்டம் போடுகிறார்கள்,ஆனால் மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.காவல்துறை உதவியுடன் அதிமுகவினர் கூட்டம் நடத்திகின்றனர் எனவும்,காவல் துறை இல்லாமல் அதிமுக கூட்டம் எங்கும் நடக்கமுடியாது எனவும் தெரிவித்தார்.