September 20, 2019 தண்டோரா குழு
சினிமா கட்அவுட், பேனர் வைப்பதற்கு பதிலாக 200 பேருக்கு ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சியை போலீஸ் துணைகமிஷனர் சரவணன் துவக்கி வைத்தார்.
சென்னையில் திருமண நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்ட அரசியல் கட்சி பேனர் ரோட்டில் விழுந்ததில், இளம்பெண் சுபஸ்ரீ பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் தொண்டர்களுக்கும் நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கும் இனி பேனர்கள் வைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையில், சினிமா தியேட்டர்களில் கட்அவுட், பேனர்கள் வைப்பதற்கு பதிலாக ரசிகர் மன்றத்தினர் ஹெல்மெட் வழங்கினால் விழிப்புணர்வாக இருக்கும் என நெல்லை போலீஸ் துணைகமிஷனர் சரவணன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று சூர்யாவின் காப்பான் படம் வெளியானது. இதையடுத்து, துணைகமிஷனரின் கோரிக்கையை ஏற்ற நடிகர் சூர்யா ரசிகர் மன்றத்தினர் தியேட்டரில் பேனர்கள் வைப்பதற்கு பதிலாக, 200 நபர்களுக்கு ஹெல்மெட் வழங்கினர். அதனை துணைகமிஷனர் சரவணன் வழங்கினார்.