November 8, 2018 தண்டோரா குழு
அதிமுகவினரின் போராட்டத்தின் எதிரொலியாக சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சர்கார் படக்குழு முடிவு செய்துள்ளதாக திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி திருப்பூர் சுப்ரமணியன் கூறியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் சர்கார்.இப்படம் தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. இதற்கிடையில்,படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான சில கருத்துகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுகவை மறைமுகமாக சாடும் விதமாக நிறைய வசனங்கள் காட்சிகள் மற்றும் அதிமுகவின் திட்டங்கள் குறித்தும்,அதிமுக தலைவர்களின் பெயரை மறைமுகமாக குறிப்பிடும் வகையிலும் சில காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, தமிழகம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சில இடங்களில் திரையங்கிகளில் வைப்பட்டுள்ள விஜயின் பேனர்களை அதிமுக தொண்டர்கள் கிழித்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அதிமுகவினரின் போராட்டத்தின் எதிரொலியாக சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சர்கார் படக்குழு முடிவு செய்துள்ளதாக திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி திருப்பூர் சுப்ரமணியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக திருப்பூர் சுப்ரமணியன் கூறுகையில்,
அதிமுகவினர் மாநிலம் முழுக்க, சர்கார் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து, தயாரிப்பு தரப்பு கவனத்திற்கு கொண்டு சென்றோம். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். நீக்கப்படும் காட்சிகள் குறித்து இன்று முடிவு செய்து, நீக்கப்பட்டு நாளை திரையிடப்படும் . காட்சிகள் நீக்கப்படுவது குறித்து செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, முருகதாஸ், விஜய்யிடம் நான் பேசவில்லை. தயாரிப்பு தரப்பு இந்த தகவலை அவர்களுக்கு சொல்லியிருப்பார்கள். படத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இயற்பெயரை குறிப்பிடும் காட்சிகள், ம்யூட் செய்யப்படும். எனவே அதிமுகவினர் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.