March 23, 2022
தண்டோரா குழு
விருதுநகரில் பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விருதுநகரில் 22 வயது பெண்மணி ஒருவரை திமுக நிர்வாகி ஹரிஹரன் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உடலுறுவு கொண்டுள்ளார். அப்போது அந்த பெண்ணிற்கு தெரியாமல் தனிமையில் இருக்கும் வீடியோவை பதிவு செய்த ஹரிஹரன், தனது நண்பரான திமுக நிர்வாகி ஜுனைத் அகமதுவிற்கு அனுப்பியுள்ளார்.
அதை தொடர்ந்து, அந்த பெண்ணை வீடியோவை வைத்து மிரட்டி 8 நபர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் மீதான மூன்றாவது நாள் விவாதத்தின் முடிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
விருதுநகர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் பாலியல் குற்ற சம்பவத்தில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கி தரப்படும். பெண் பாலியல் வன்கொடுமை புகார் வந்த 24 மணிநேரத்துக்குள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் பாலியல் வழக்கில் தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் வகையில் தண்டனை வாங்கிக் கொடுக்கப்படும்.
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கை நேரடியாக கண்காணிக்குமாறு தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். விருதுநகர் பாலியல் குற்ற சம்பவம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.பொள்ளாச்சி,வண்ணாரப்பேட்டை வழக்கை அதிமுக அரசு கையாண்டதை போன்று இந்த வழக்கை கையாளமாட்டோம் என்றார்.