April 8, 2019 தண்டோரா குழு
பொள்ளாச்சி மாணவி பிரகதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ்குமாரை 15 நாள் சிறையில் அடைக்க பொள்ளச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி இவரது மகள் பிரகதி இவர் கோவை ராமகிருஷ்ணா கல்லூரியில் BSC கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த நாட்டு துறை என்பவரும் பிரகதியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து இரண்டு மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் வைகாசி மாதம் திருமணம் நடைபெற உள்ளதால் அழைப்பிதழ்களிலும் அச்சடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளிகிழமையன்று கல்லூரி விடுதியில் இருந்து ஊருக்கு புறப்பட்ட மாணவி நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை பெற்றோர்கள் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது மாணவியின் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இரவு நேரம் ஆகியும் மாணவி வீடு திரும்பாததால் பதட்டமடைந்த பெற்றோர்கள் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போனதாக மாணவியை தேடி வந்த நிலையில் இன்று மாலை பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் உள்ள பூசாரிபட்டி அருகே சாலையோரம் உள்ள முட்புதரில் ஆடைகள் கலைந்த நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இதையடுத்து, கொலையாளிகளை பிடிக்க காவல்துறை சார்பில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், பிரகதியை சதீஷ் ஒருதலைபட்சமாக காதலித்து வந்தது தெரியவந்தது. இதனிடையே பிரகதிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் ஆனதால் ஆத்திரமடைந்த சதீஷ், பிரகதியை கடத்தி கொலை செய்துள்ளார்.
இதையடுத்து பிரகதியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் அவரது உடலில் கழுத்து மற்றும் மார்பகம் உள்ளிட்ட 3 பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை அடுத்து கல்லுரி மாணவியை கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள சதீஷ்குமார் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமாரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சதீஷ்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.