June 23, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டம் பூலுவபட்டி இலங்கை தமிழர்கள் முகாமில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்முகாமில் நடைபெற்ற திருமண விழாவில் திருமணம் செய்து கொண்ட மாணிக்கவாசகன், ஸ்ரீசரிகா தம்பதியினரை வாழத்தி பொன்னாடை வழங்கினார்.
இந்நிழ்ச்சியின் போது வருவாய் கோட்டாட்சியர் (கோவை தெற்கு) செந்தில் அரசன், வட்டாட்சியர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், வருவாய் துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை சுணக்கமின்றி விரைந்து வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் பேரூர் பேரூராட்சியின் 3 வது வார்டு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ளவர்களுக்கான அடிப்படை தேவைகளை உறுதி செய்திட அறிவுறுத்தினார்.தொடர்ந்து பூலுவப்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையித்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள புதிய குடிநீர் இணைப்பு பணிகள், உள்ளிட்ட அடிப்படை மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான பணி முன்னேற்ற விவரத்தினை தெரிவித்திட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருந்து வழங்குமிடம், ரத்த பரிசோதனை பிரிவு, காசநோய் பிரிவு மற்றும் சித்தா பிரிவு உள்ளிட்டவற்றில் மருத்துவ தேவைகளுக்கென வருகை தரும் மக்களுக்கு உடனடியாக தேவையான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய மருத்துவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.