June 21, 2025
தண்டோரா குழு
பேரூர் ஆதீனம்,ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி “பாரம்பரிய சிவவேள்வி பூஜை”!-ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்கிறார்.
பேரூர் ஆதீனத்தின் 24-ஆம் குருமகாசந்நிதானம் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா,பேரூர் ஆதீன வளாகத்தில் வரும் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று நடைபெறும் “பாரம்பரிய சிவவேள்வி பூஜையில்” ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்ள உள்ளார்.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (21/06/2025), கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார் ஆகியோர் பங்கேற்று இந்நிகழ்ச்சி குறித்து விரிவாக பேசினர்.இவர்களுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொள்ளாச்சி பகுதி நிர்வாகி கோபால் உடனிருந்தார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேரூர் ஆதீனம் பேசியதாவது, “
“மேலைச்சிதம்பரம்” எனும் புகழ் கொண்டதும் தமிழ்ப்பண்பாட்டின் பத்திக்களஞ்சியமுமாக இருப்பது பேரூர். இப்பேரூரில் பேரூராதீனத்தைத் கி.பி.11-ஆம் நூற்றாண்டில் அருட்குரு சாந்தலிங்கப்பெருமான் தோற்றுவித்தார். அதன் பிறகு அவரின் அருள்வழியில் 24-ஆம் குருமகாசந்நிதானமாக தெய்வத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் திகழ்ந்தார். அவர் சைவத்தையும் தமிழையும் இரு கண்களாகப் போற்றினார். அவரின் வழியில் கல்வி, சமுதாயம், மருத்துவம், பாரம்பரியம், பண்பாடு ஆகிய பணிகளை ஆதீனம் தற்போது சிறப்பான முறையில் செய்து வருகிறது.
பாரதநாட்டில் சமயமும் சமயம் சார்ந்த நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெறுவதற்கும் அதில் ஏதாவது இடையூறு ஏற்படும் போது அதை துணிந்து நின்று கேட்டு அதை தக்க வைத்துக் கொள்வதற்கும் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு ஆர் எஸ் எஸ் அமைப்பாகும். அதுமட்டுமல்லாமல் அவ்வமைப்பு, நமது பண்பாடு கலாச்சாரம் ஆகியவை மரபு மாறாமல் பேணப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதுவும் தனது நூற்றாண்டை நிறைவு செய்வது மகிழ்வுக்குரியது.
பேரூர் ஆதீனத்தின் 24–ஆம் குருமகாசந்நிதானங்கள் உலகெங்கும் விரிந்து மிகச் சிறப்பாக செயலாற்றி வரும் தமிழ் நெறி வழிபாட்டின் மறுமலர்ச்சியை உருவாக்கியவர்கள். குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய இடங்களுக்கு சென்று அவர்களின் இல்லங்களில் திருவிளக்கு வழிபாடுகளை நடத்தியது, பல்வேறு வகையான மக்களுக்கும் தீக்கைகளை வழங்கி அவர்களை ஆதீன கர்த்தர்களாக ஆக்கியது என அடிகளார் அவர்கள் ஆர் எஸ் எஸ் செய்ததைப் போல பல்வேறு பணிகளை தன் வாழ்நாள் முழுவதும் செய்தவர்கள்.
இவ்வாறு தன் வாழ்நாள் முழுவதும் சமய சமுதாய மறுமலர்ச்சிக்காக அயராது உழைத்த அடிகள் அவர்களுக்கும், ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கும் இந்த ஆண்டு நூறாவது ஆண்டாக அமைந்துள்ளது. அதை ஒட்டி இருவருக்குமான நூற்றாண்டு விழாவை நமது பேரூராதீன வளாகத்தில் சூன் 23, ஆனித்திங்கள் 9 ஆம் நாள் திங்கட்கிழமை நடத்த இருப்பது மகிழ்வுக்குரியது. அதற்கு ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் வருகை தந்து சிறப்பிக்க உள்ளார்கள்.
அன்று காலை 6 மணி முதல் 7:15 மணி வரை தெய்வத்தமிழும் வடமொழியும் ஓதி வேள்விகள் நடத்தப்படும். வேள்வியின் நிறைவாக மோகன் பகவத் சிவலிங்கத்திற்கு அபிஷேக வழிபாடுகளை செய்ய உள்ளார்கள். அதைத்தொடர்ந்து 11 மணி வரை நடைபெறம் பொது நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ள உள்ளார். இந்த அனைத்து நிகழ்வுகளிலும் மக்கள் கலந்து சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அனைவரும் வருக என அன்புடன் அழைக்கிறோம்.” என அவர் கூறினார்.