May 10, 2018
தண்டோரா குழு
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட சந்தானம் குழுவின் அறிக்கையை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டதாக கைது செய்யப்பட்டார். இது தொடா்பாக தமிழக அரசு சார்பில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. அதைபோல் ஆளுநா் பன்வாரிலால் புரோகித் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான குழு ஒன்றையும் நியமித்து விசாரணைகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையில், ஆளுநா் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவின் விசாரணை நிறைவு பெற்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சந்தானம்குழு விசாரணையை முடித்து அறிக்கையை தயார் செய்து வருகிறது.
இந்நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட சந்தானம் குழுவின் அறிக்கையை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.விசாரணை முடிந்து சீலிடப்பட்ட உறையில் விசாரணை அறிக்கையை ஆளுநரிடம் மட்டுமே சந்தானம் குழு சமர்பிக்க வேண்டும். அறிக்கையை வெளியிடவோ, ஊடகங்களுக்கு வழங்கவோகூடாது எனக் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.