January 29, 2019 தண்டோரா குழு
பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவும் ஊதிய முரண்பாடுகளைக் களையவும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 22-ம் தேதி முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், இன்று பணிக்கு திரும்பாத ஆசிரியர் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அதில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், போராட்டம் தொடர்பான விவகாரத்தில் அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜாக்டோ ஜியோ அமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது பேச்சுவார்த்தைக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைக்க முடியாது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசு
பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பிவோம் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய முரண்பாடு இருப்பதாகவும், மத்திய அரசின் துப்புரவு தொழிலாளர்களை விட குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது என்றும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இரண்டு முறை நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று போராட்டத்தை தள்ளி வைத்தோம், கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு அளித்த உத்திரவாதத்தை செயல்படுத்த தவறியதால் தான் மீண்டும் போராட்டம் நடத்தி வருகிறோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து உயர்நீதிமன்றம் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியது மகிழ்ச்சி என்று கூறிய நீதிபதி கிருபாகரன் அரசும் ஊழியர் சங்க நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பாக தற்போது உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என்றும், முடிவுக்கு கொண்டு வர வேண்டுகோள் மட்டுமே விடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.