July 18, 2021
தண்டோரா குழு
குழந்தைகளை கொரோனா தாக்குதலில் இருந்து பாதுகாக்க பெற்றோர்கள் உடனே தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டும் கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டத்தில், தற்போது 250க்கும் குறைவாக கொரோனா தொற்று இருந்து வருகிறது.இந்நிலையில், கொரோனா மூன்றாம் அலை வராமல் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை சார்பில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேசமயம், கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை,அதிகளவில் தாக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.அதற்கேற்ப, கோவை அரசு மருத்துவமனையில், 350 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.தவிர, கொரோனா மூன்றாவது அலையின் போது, குழந்தைகளை பராமரிப்பது குறித்த பயிற்சியும், டாக்டர்கள், நர்ஸ்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,
”கொரோனா தொற்றானது பெரும்பாலும், பெற்றோர்களிடமிருந்து தான்,குழந்தைகளுக்கு பரவ வாய்ப்புள்ளது.எனவே,பெற்றோர் முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளை அதிகம் வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்ப்பது நல்லது.புரத சத்துகள் நிறைந்த உணவு எடுத்துக் கொள்ளலாம்.குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.இதுவரை, கொரோனா குழந்தைகள் பிரிவில்,யாரும் அனுமதிக்கப் படவில்லை,” என்றார்.