March 12, 2020
தண்டோரா குழு
தமிழக- கேரள எல்லைப்பகுதியான கோவை ஆனைகட்டி பகுதியில் கைது செய்யப்பட்ட கர்நாடகாவைச் சேர்ந்த பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி என்கிற சோபா கோவை நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார்.
கேரள மாநிலம் கண்ணனூர் மற்றும் காசர்கோடு பகுதியில் அண்மைக்காலமாக மாவோ தீவிரவாதிகள் திடீரென அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். இதனையடுத்து அம்மாநில போலீசார் அவ்வப்போது நடத்திய அதிரடி தாக்குதலில் மாவோயிஸ்ட் 5க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் வனப்பகுதிக்குள் தப்பி ஓடியுள்ளனர். அண்மையில் கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் தீபக் ஆனைகட்டியில் தமிழக சிறப்பு அதிரடிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் கேரளா தமிழக வனப்பகுதியில் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று அதிகாலை கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் பேருந்துக்காக வந்த பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி என்கிற சோபாவை ஈரோடு மாவட்ட கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.பின்னர் அவரை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் கோவை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அவர்,நீதிபதி சக்திவேல் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இவர் குறித்த தகவல் அளித்தால் 1 லட்சம் பரிசு வழஙகுவதாக கர்நாடக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.