March 5, 2019 தண்டோரா குழு
புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள் என நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப் 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தற்கொலை படை தீவிரவாதி ஒருவன்
நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த விமானப்படை பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தங்கி இருந்த முகாம்கள் மீது தாக்கல் நடத்தி அழித்தது. பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா பயங்கரவாதிகளை அழித்தது குறித்து ஒவ்வொரு மேடையிலும் பிரதமர் மோடி தவறாமல் பேசிவருகிறார்.
இதற்கிடையில், சமீபத்தில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவு செய்தார். அதில் அவர் “இயற்கையாகவே நம்முடைய ராணுவ படைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், பெருமை கொள்ள வேண்டும். ஆனால் சிலர் இந்தியப் படைகளை கேள்வி கேட்க விரும்புகிறார்கள், அது ஏன் என்று தெரியவில்லை” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், மோடியின் இந்த டுவிட்டை குறிப்பிட்டு நடிகர் சித்தார்த் இதற்கு பதிலளிக்கும் வகையில் ஒரு பதிவை பதிவு செய்த்துள்ளார். அதில், “புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். உண்மையான நாயகர்களுக்கு முன் நின்றுகொண்டு, நாயகன் போல நடிப்பதை நிறுத்துங்கள். பாதுகாப்புப் படையினருக்கு நீங்கள் மரியாதை கொடுங்கள். நீங்கள் ராணுவ வீரர் கிடையாது. அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள். ஜெய் ஹிந்த்” என்று பதிவிட்டுள்ளார்.