January 7, 2019 தண்டோரா குழு
புயல்பாதிப்பை அறியாமல் தேர்தல்தேதியை ஆணையம் அறிவித்ததைமக்கள் கேலிக்கூத்தாக பார்க்கின்றனர் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
கருணாநிதி மறைந்ததையடுத்து திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவியது. இத்தொகுதியில் திமுக சார்பில் பூண்டி கலைவாணனும் அமமுக சார்பில் காமராஜும், நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் ஹமீதும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், திருவாரூரில் இன்னும் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும், மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும், எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனால் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் இன்று செய்தது. இதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
“திருவாரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் இன்று ‘கஜா’ புயல் நிவாரணத்தை காரணம் காட்டி ரத்து செய்திருக்கிறது. இடைத்தேர்தலை அறிவித்த போது இந்திய தேர்தல் ஆணையம், தமிழக அரசோடு கலந்து பேசி முடிவு எடுத்திருந்தால் இடைத்தேர்தல் ரத்து என்கிற நிலை ஏற்பட்டிருக்காது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் ‘கஜா’ புயல் பாதிப்பு என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே தெரிந்த ஒன்று. இந்த பாதிப்பின் நிலையை அறியாமல் இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்ததை, மக்கள் கேலிக்கூத்தாக பார்க்கின்றனர். மக்கள் யாரும் தேர்தல் வேண்டும் என்று கேட்கவில்லை, வேண்டாம் என்றும் சொல்லவில்லை. ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது ஒரு கேலிக்கூத்தாக, கேள்விக்குறியாக மாறியிருப்பதை தேமுதிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என விஜாகாந்த் தெரிவித்துள்ளார்.