November 26, 2021
தண்டோரா குழு
கோவை கீரணத்தம் ஊராட்சி மற்றும் தொட்டிபாளையம் ஊராட்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை மற்றும் 2 லட்சம் கொள்ளவு கொண்ட தரைமட்ட தண்ணீர் தொட்டி ஆகியவற்றை வெள்ளியன்று திறந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். குறிப்பாக ஏழை எளிய உழைப்பாளி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு சமூதாய கூடங்கள், நியாயவிலைக்கடைகள், தண்ணீர் தொட்டிகள், அங்கன்வாடி கட்டிடங்கள் போன்றவற்றிற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து அம்மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இதன்ஒருபகுதியாக கோவை கீரணத்தம் ஊராட்சியில் புதிதாக நியாயவிலைக்கடை அமைப்பதற்கு 12.63 லட்சம் ரூபாயும், வெள்ளமடை ஊராட்சி தொட்டிபாளையத்தில் 14.25 லட்சம்ரூபாய் மதிப்பீட்டில் 2லட்சம் கொள்ள்ளவு கொண்ட தரைமட்ட தொட்டி ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். இத்திட்டத்திற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்தது. இதனையடுத்து வெள்ளியன்று இந்த கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்து அர்ப்பணித்தார்.
கோவை கீரணத்தம் பகுதியில் நியாய விலைக்கடை திறப்புவிழா மற்றும் வெள்ளமடை ஊராட்சி தொட்டிபாளையத்தில் 2 லட்சம் கொள்ளவு கொண்ட தரைமட்ட தொட்டி கட்டிடங்களை திறந்துவைத்து பி.ஆர்.நடராஜன் எம்பி சிறப்புரையாற்றினார். இதில் திமுக மேற்கு மாவட்ட பொருப்பாளர் பையா கிருஷ்ணன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
இதில் சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி மற்றும் கீரணத்தம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தொட்டிபாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.