June 9, 2018
தண்டோரா குழு
சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து அதில் இருந்து எரிபொருள் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. பால், தயிர், எண்ணெய், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பைகள், உறிஞ்சு குழாய்கள் போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்துக்கான நோக்கமாக‘பிளாஸ்டிக் மாசுவை வெல்வோம்’ என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மாணவ மாணவிகள் சேர்ந்து பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து எரிபொருள் எடுப்பதை பற்றி ஆராய்ச்சி செய்தனர். தொழில்நுட்ப உதவியாளர் பேராசிரியர் இந்துமதி நம்பி தொழில் வழிகாட்டியான ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாணவி திவ்ய பிரியா தலைமையிலான குழுவினர் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்தி ஒரு கிலோ மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவில் இருந்து 700 மில்லி லிட்டர் வரை எரிபொருளை தயாரித்து உள்ளனர். இந்த எரிபொருள் டீசலுக்கு மாற்றாக ஜெனரேட்டர்கள் தொழிற்சாலை கொதிகலன்கள் டீசல் என்ஜின்கள் ஆகியவற்றிக்கு பயன்படுத்தலாம். இந்தியாவை பொறுத்த வரை குறைந்தபட்சம் தினமும் 15 ஆயிரம் டன்க்கு மேல் பிளாஸ்டிக் பொருட்கள் கழிவு ஏற்படுகிறது. இந்த கழிவுகள் அனைத்துமே சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக உள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி பெரிய அளவில் எரிபொருள் உற்பத்தி செய்தால் டீசலைவிட விலை குறைவாக விற்க முடியும் என்றும் இந்த கண்டுபிடிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.