February 3, 2021
தண்டோரா குழு
வீட்டு உபயோக துணிவகை உற்பத்தி தொழிலுக்கு ஊதிய நிர்ணயம் குறித்த ஆலோசனைக்குழு கூட்டம் வரும் 5ம் தேதி நடக்கிறது.
வீட்டு உபயோக துணிவகை உற்பத்தி தொழிலுக்கு ஊதிய நிர்ணயம் குறித்த ஆலோசனைக்குழு கூட்டம் வரும் 5ம் தேதி, பொள்ளாச்சி தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடைபெற உள்ளது என தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெங்கடேசன் கூறியிருப்பதாவது:
வீட்டு உபயோக துணிவகை உற்பத்தி தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்வதற்கு அரசுக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு, வரும் 5ம் தேதி மாலை 3 மணிக்கு, பொள்ளாச்சி தொழிலாளர் துறை அலுவலகத்தில் ஆலோசனைக் குழுவின் 5வது கூட்டம் நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில், நிர்வாகத்தின் பிரதிநிதிகளான வெங்கடாசலம், அசோக்குமார், பிரிட்டோ, உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதியாக மாணிக்கம் மற்றும் தங்கராஜூ, மாடசாமி ஆகியோரிடம் கருத்துக்கேட்பு நடத்தப்படும். அதன் பிறகு, திருப்பூர் மாவட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் வீட்டு உபயோகத் துணி வகை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்களை கள ஆய்வுப் பணியாக ஆய்வு மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தொழில் தொடர்புடைய பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை மற்றும் தங்களின் கருத்துகளை முன்மொழியலாம். மேலும், கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.