November 20, 2019 தண்டோரா குழு
பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து கோவை தெற்குவட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
பாபர் மசூதி வழக்கில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு நியாயமற்றது எனவும் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படவில்லை என பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்ப்பில் தமிழகம் முழுமுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று மாலை கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் , மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, ஜமாஅத்தே இஸ்லாமிக் ஹிந்த், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட 20க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு சட்டத்தின்படி வழங்கப்படவில்லை எனவும் சட்டத்தின் படியான தீர்ப்பை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் தெகலான் பார்கவி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.