January 20, 2020 தண்டோரா குழு
பாரதீய ஜனதா கட்சி கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது பாஜகவின் தேசிய தலைவராக இருந்த ராஜ்நாத்சிங், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவியேற்றார். ராஜ்நாத் சிங்கை தொடர்ந்து அமித்ஷா பாஜக தலைவரானார்.
இதையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக அரசு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் பாஜக தலைவராக இருந்த அமித்ஷா, உள்துறை அமைச்சராக பதவியேற்றார். இதனால் பாஜகவின் புதிய தேசிய தலைவரை நியமிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நாடு முழுவதும், பா.ஜ.,வின், உட்கட்சித் தேர்தல்கள், பல மாதங்களாக நடைபெற்று, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கும், புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தேசிய அளவிலான தலைவர், பொதுச் செயலர் உட்பட புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணிகளை, மூத்த தலைவர் ராதா மோகன்சிங் தலைமையிலான குழு, மேற்பார்வையிட்டு வருகிறது.
இதற்கிடையில், பாஜகவின் தேசிய தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் பொறுப்பாளர் ராதாமோகன் சிங் வெளியிட்டார். அதில் தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல், வேட்புமனுக்கள் பரிசீலனை, திரும்பப் பெறுதல் அனைத்தும் இன்று பகல் 2.30 மணிக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டது.இதன் அடிப்படையில் ஜே.பி. நட்டா இன்று பாஜக தேசிய தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவருக்கு பாஜக மூத்த தலைவர்கள் பலர் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பின்னர் பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.