January 8, 2019 தண்டோரா குழு
பிரபல ஆன்மீக வழிகாட்டியும் வாழ்க்கை நல மேம்படுத்துனருமான குருஜி மித்ரேஷிவா அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படும் தக்ஷிணா பவுண்டேஷன் என்னும் அமைப்பு பவானி கூடுதுறையில் ஏற்பாடு செய்திருந்த நீருக்கு நன்றி எனும் ஆரத்தி விழாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தக்ஷிணா பவுண்டேசன் அமைப்பிற்கு இந்தியாவெங்கும் கிளைகளும் ஏராளமான தன்னார்வலர்களும் உள்ளனர். குருஜி மித்ரேஷிவா அளிக்கும் ulchemy உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் மிகவும் பிரசித்தம். பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. உயிர்வாழவும் அன்றாட தேவைகளுக்காகவும் நீரை பயன்படுத்துகிறோம். நாம் வாழும் இந்த உலகமும் நமது உடலும் 75 சதவீதத்திற்கும் அதிகமான நீரினால் ஆனது. நீர் இல்லாமல் இந்த உலகமே இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. நீர் என்பது வெறும் திரவம் மட்டுமல்ல. ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்த கலவை மட்டுமல்ல. நீருக்கும் உயிரும் உணர்ச்சிகளும் உண்டு என்பது அறிவியல் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உணர்வுகளில் தலையாயது நன்றி என்னும் உணர்வு. தன்னியல்பாக சொல்லச்சொல்ல வெளிப்படுத்த வெளிப்படுத்த மேலும் மேலுமென பெருகிச்செல்லும் பலன்களை அளிக்கக் கூடியது இந்த நன்றி என்னும் உணர்வு. காலம் காலமாக நம்மை வாழவைக்கும் நீருக்கு நன்றி சொல்லும் வழக்கம் உலகின் பல நாடுகளில் உள்ளது. ஏன் இந்தியாவிலும் கூட வற்றாத ஜீவ நதிகளான கங்கை போன்ற நதிகளுக்கு அன்றாடம் மகா ஆரத்தி காட்டப்படுகிறது. தமிழகத்திலும் இந்த நல் வழக்கம் தொடர வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு திருச்சியில் காவிரி நதிக்கு ஆரத்தி தக்ஷிணா பவுண்டேஷனால் நிகழ்த்தப்பட்டது. இந்த ஆண்டு நீருக்கு நன்றி சொல்லும் மகா ஆரத்தி விழா பவானி கூடுதுறையில் இன்று ஞாயிறு (ஜனவரி 6) நடைபெற்றது.
நீருக்கு நன்றி ஆரத்தி விழா
செண்டை வாத்திய முழக்கத்துடன் 101 கலச ஊர்வலம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நீர் குறித்த சிறப்பு நடனம், சிங்காரி மேளம் உள்ளிட்ட சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் குருஜி மித்ரேஷிவா பேசுகையில்,
மண்ணில் உயிர்கள் வாழ கருணை செய்யும் மகத்தான நீருக்கு நம் உள்ளத்தின் அடியாழத்திலிருந்து உணர்ச்சி மிக்க நன்றி சொல்லும் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்விற்கு வருகை தந்துள்ள அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள். நன்றியுணர்வு உணர்வுகளில் தலையானது. பல்வளங்களாய் பல்கிப் பெருகக்கூடியது. வாழ்வு வளம் பெற நீருக்கு நன்றி சொல்வோம். நதிகளை நீர் நிலைகளை நீரைப் போற்றுவோம்” என்றார்.
அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மகா ஆரத்தி விழா நடைபெற்றது. கங்கையில் எப்படி ஆரத்தி விழா நடைபெறுமோ அதே போலவே இந்த ஆரத்தி விழா நடைபெற்றது. பரம்பரை பரம்பரையாக கங்கைக்கரையில் ஆரத்தி விழா செய்யும் அர்ச்சகர்களே இதற்காக வரவழைக்கப்பட்டு இருந்தார்கள். பவானி, ஈரோடு, கோவை, கோபிச்செட்டிப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பல்லாயிரக் கணக்கில் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், நீதிபதி. ஜி.ஆர். சுவாமிநாதன், கே.ஜி.பக்தவத்சலம், கே.ஜி. மருத்துவமனை, கே. ராமசாமி, ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ், புருஷோத்தமன், தீபா மெடிக்கல்ஸ், சூர்ய கைலாஷ், கைலாஷ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.