December 17, 2019
கோவை மாவட்டம் சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் உட்பட 4 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டதை இரத்து செய்ய கோரி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராசன் தலைமையில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் விமான படை தளத்தின் அருகில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கடந்த வியாழக்கிழமை அந்த பள்ளியில் 11 ம் வகுப்பு படிக்கும் பீகாரை சேர்ந்த மாணவரை ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் வியாழக்கிழமை ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்திய கூறி கோவை அரசு மருத்துவமனையில் மாணவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது பள்ளி வகுப்பறையில் சக மாணவர்களை வெளியேற்றி விட்டு தன்னை முதல்வரும் ஆசிரியைகள் சிலரும் சேர்த்து தாக்கியதாகவும், ஆடைளை களைந்து நிர்வாணப்படுத்தி பிறப்புறுப்பை கசக்கி துன்புறுத்தியதுடன், அதை வீடியோவாக பதிவு செய்து கொண்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் சூலூர் காவல் துறையில் புகார் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் கேந்திரிய பள்ளி முதல்வர் மேகநாதன், ஆசிரியைகள் திவ்யா,தமிழரசி,அருணா ஆகியோர் மீது போக்சோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே பள்ளியில் ஒழுங்கீனமாக செயல்பட்டதற்காக 11 ம் வகுப்பு மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அவரும் அவரது தம்பி 9 ம் வகுப்பு மாணவருடன் சேர்ந்து முதல்வரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், மாணவர்களை தூண்டி விட்டதாக அவர்களின் பெற்றோர்கள் ஹரேராம் சிங், சீமா குமாரி மீது பள்ளியின் பொறுப்பு முதல்வர் நாகேந்திரன் புகார் அளித்தார். இதன் பேரில் சூலூர் விமான படை தளத்தில் ஜூனியர் வாரண்ட் ஆபிசராக பணியாற்றி வரும் ஹரேராம் சிங் உள்ளிட்ட 4 பேர் மீதும் 3 பிரிவுகளில் சூலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராசன் மற்றும் கேந்திரிய வித்யலயா பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மீது பீகார் மாணவர்கள் பொய் புகார் அளித்து பள்ளியின் நன்மதிப்பை கெடுத்துள்ளதாகவும், சூலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தாமல் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர் எனவும் புகார் தெரிவித்தனர். இரண்டு பீகார் மாணவர்களையும் வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும், பள்ளி தொடர்ந்து இயங்கவும், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி மனு அளித்தனர்.
இதனிடையே நேற்று பள்ளி சென்ற இரண்டு மாணவர்களை காணவில்லை என சூலூர் விமான படைத்தள அதிகாரி ஹரேராம்சிங் மற்றும் சீமா குமாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகாரளிக்க வந்தனர். பள்ளி நிர்வாகம் முதல்வருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், தங்களது மகன்களை பள்ளியில் இருந்து வெளியேற்றும் நோக்கில் நாடகமாடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தங்களது புகாரின் பேரில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், பள்ளி நிர்வாகம் தங்களது மகன்கள் மீது பொய் புகாரளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இரு தரப்பினரும் மாறி மாறி புகாரளிக்க வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது