January 17, 2019 தண்டோரா குழு
பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம்ரஹீமுக்கு ஹரியானா சி.பி.ஐ., நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
அரியானா மாநிலம் சில்சாந் அகரில் வசித்து வந்த பத்திரிகையாளர் சத்ரபதி. இவர் மாலை நாளிதழ் ஆசிரியராக இருந்தார். இவரது பத்திரிகையில் அரியானா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக செய்தி வெளியிட்டார். இதையடுத்து 2002ஆம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, 2003ஆம் ஆண்டு சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்த விசாரணையில், பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என அரியானா மாநிலத்தின் சிபிஐ நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. மேலும், இவ்வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கான தண்டனை வரும் 17ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என அரியானா பஞ்ச்குலா நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழல்கில் இன்று அரியானா பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம்ரஹீமுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய குல்தீப்சிங், நிர்மல்சிங், கிரிஷன் சிங் உட்பட 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏற்கனவே அவர் அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.