April 3, 2018
தண்டோரா குழு
பொய் செய்தி வெளியிட்டால் செய்தியாளர் அங்கீகாரம் ரத்து என்ற மத்திய அமைச்சரின் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர்கள் சிலர் தவறான செய்திகளைப் பரப்பி வருவதாகவும் அவ்வாறு தொடர்ந்து தவறான செய்திகளைப் பரப்பினால் பத்திரிக்கையார்களின் அங்கீகாரம் ரத்து செய்யபடும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது.
முன்னதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, இதுகுறித்து விரைவில் விதிகளை வகுக்கவுள்ளதாகவும், விதிகளை மீறும் நிருபர்களை இந்திய பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் தேசிய தொலைக்காட்சி கூட்டமைப்பு ஆகியவை முடிவு செய்யும் எனவும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது ஒரு முறை விதிமீறினால் 6 மாத தடை, இரண்டு முறை என்றால் 1 ஆண்டு தடை, 3வது முறை விதிமீறியது கண்டுபிடிக்கப்பட்டால் நிரந்தரமாக அங்கீகாரம் தடை செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், சமூக வலைதளங்களில் பரவும் பொய் செய்திகளை தடுக்கவும், புதிய விதிகள் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாகவும், இதற்காக வருங்காலத்தில், பத்திரிக்கையாளர் மற்றும் தொலைக்காட்சிக்கு என ஒரு தனி ஆணையம் உருவாகும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் வழிக்காட்டுதலின் படி, பத்திரிகையாளர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது, இந்த விவகாரத்தை பிரஸ் கவுன்சில் மட்டுமே பேச வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.