January 22, 2022
தண்டோரா குழு
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அணிவகுப்பு வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சிறுவன் பதாகைகளுடன் கோவை ஆட்சியர் அலுவலகம் வந்தார்.
கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் முகுந்தன். இந்த மாணவன் தனது தாத்தா தேவராஜ்-உடன் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார்.
மேலும் குடியரசு தினத்தன்று டெல்லியில் நடக்கும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் தமிழக அணிவகுப்பு வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஆட்சியர் அலுவலகம் முன்பு நின்றிருந்தார்.
அந்த பதாகைகளில் “உலக தமிழர்களின் குரல். அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா! சுதந்திர இந்தியாவில் தான் தமிழகம் உள்ளது. அதை யாரும் மறுப்பதில்லை. தேர்வு குழு அனுமதி மறுத்தாலும் இந்த ஒப்பற்ற தலைவர்களை உலக த்தமிழகர்களின் நெஞ்சில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் அதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது” என்று எழுதியிருந்தது.
இதுகுறித்து தேவராஜ் கூறுகையில்,
“தொடர்ந்து இதுபோன்ற சமூக விழிப்புணர்வு செயல்களை நாங்கள் செய்து வருகிறோம். அந்த வகையில் முகுந்தன் தமிழகத்தை சேர்ந்த அணிவகுப்பு வாகனங்களுக்கு குடியரசு தினவிழா அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கண்டிப்பாக குடியரசு தின அணிவகுப்பு விழாவில் தமிழக உறுதி இடம் பெறவேண்டும்.” என்றார்.