March 4, 2020
தண்டோரா குழு
நெகமம் அருகேயுள்ள தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஜி எஸ்டி வரி செலுத்தாத நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் 1300க்கும் மேற்பட்ட தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த தொழிற்சாலைகளில் சில நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் செயல்படுவதாக , நெகமம் கள்ளிப்பட்டி புதூரைச்சேர்ந்த குமார் ராஜ் என்பவர் டெல்லியிலுள்ள ஜிஎஸ்டி ஆணையருக்கு கடந்த ஜனவரி 11ஆம் தேதி புகார் அளித்திருந்தார். இந்த புகாரில் கள்ளிப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கள்ளிப்பட்டி புதூரில் 20 க்கும் தென்னை நார் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், இந்த நிறுவனங்கள் ஜி எஸ் டி மற்றும் பஞ்சாயத்து வரி உள்ளிட்ட எதையும் செலுத்தாமல் ஆண்டுக்கு 250 கோடி வரை உற்பத்தி செய்வதாகவும், ஜி எஸ் டி தலைமை அதிகாரிக்கு புகாரளித்திருந்தார்.
இதனையடுத்து டெல்லியிலிருந்து விநாயக் நாயக் தலைமையில் வந்திருந்த 12 ஜி எஸ் டி அதிகாரிகள் கள்ளிப்பட்டி புதூரிலுள்ள சூர்யா காயர்ஸ், சோபியா காயர்ஸ், வேலு பைபர்ஸ், வெற்றி விநாயகா காயர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் ஜி எஸ் டி வரி செலுத்தி இருக்கின்றனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளாக பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியும் ஜி எஸ்டி வரி செலுத்தவில்லை என தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. தென்னை நார் உற்பத்திக்கு 5% ஜி.எஸ்.டி மட்டுமே வரி விதிக்கப்பட்டாலும், இதுவரை வரி ஏய்ப்பு செய்து வந்துள்ளதாக கூறி தற்போது தான் நான்கு நிறுவனங்களில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பல நிறுவனங்களில் விரைவில் விசாரணை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.