May 31, 2018
தண்டோரா குழு
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் மே மாதத்தில் கோடை விழா நடைபெறும்.இந்த ஆண்டு கோடை விழாவானது கடந்த மே 5 ஆம் தேதி காய்கறி கண்காட்சியுடன் இனிதே துவங்கியது.
இதனையடுத்து உலக புகழ் பெற்ற ரோஜா கண்காட்சி,வாசனை திரவிய கண்காட்சி என கலை கட்டிய கோடைவிழாவின் மணி மகுடமாய் கடந்த 18 ஆம் தேதி உதகை தாவரவியல் பூங்காவில் 122 ஆவது மலர் கண்காட்சி நடைபெற்றது.தொடர்ந்து 5 நாட்கள் நடை பெற்ற இந்த மலர் கணக்காட்சியை உலகம் முழுவதும் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.இதனை தொடர்ந்து குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 60 பழக்கண்காட்சி நடைபெற்றது.
இந்நிலையில் இந்த ஆண்டு கோடை விழாவின் நிறைவு விழா உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.இவ்விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா தலைமை வகித்து விழா பேருரை ஆற்றினார்.மேலும்,கோடை விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் தனியார் அமைப்பினருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறைவு விழாவில் நீலகிரி மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முக பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.