July 9, 2018
நீலகிரி மாவட்டம் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாகும்.இங்கு ஆண்டு தோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் தனியார் விடுதிகள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தங்கி நீலகிரியில் உள்ள சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.
நீலகிரியில் இதை போன்ற தங்கும் விடுதிகள் மற்றும் நட்சத்திர விடுதிகள் சொற்பமாகவே உள்ளது.இதனால் ‘சுற்றுலா பயணிகள்’ அதிகமாக வரும் சமயங்களில் அவர்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் அவதியுற்று வந்தனர்.இதனை கருத்திற்கொண்டு நீலகிரியில் சிலர் தங்கும் விடுதிகளுக்கு மாற்றாக ‘காட்டேஜ்கள் மற்றும் ரிசார்ட்களை’ அதிக அளவில் உருவாக்கினர்.நாளைடைவில் காட்டேஜ்களின் தேவை அதிகரித்ததால் ஒரு சிலர் குடியிருப்பு வீடுகளை காட்டேஜ்களாக மாற்றி வாடகைக்கு விட்டு வந்தனர்.இது நீலகிரியில் நாளைடைவில் பெருகியது.
சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இயற்கை அழகைக் கண்டு ரசிக்கும் வண்ணம் காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மிக அதிக அளவில் காட்டேஜ்களை கட்டினர்.மேலும்,விவசாய நிலங்களிலும் குடியிருப்புகளுக்காக அனுமதி பெற்று அதை காட்டேஜ்களாக மாற்றி சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டு வியாபாரம் செய்து வந்தனர்.சாதாரண நாட்களில் ஒரு வாடகையும் அதே சமயம் சீசன் சமயங்களில் பல மடங்கு உயர்த்தியும் வாடைகைக்கு விட்டு வந்தனர்.
இதனால்,இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாது சுற்றுலா துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை கோரிக்கை விடுத்தும் வந்தனர்.இதனை கருத்திற்கொண்டு தற்போது நகராட்சி நிர்வாகம் முறையான அனுமதியற்ற காட்டேஜ்களுக்கு சீல் வைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
குடியிருப்புகளை காட்டேஜ்களாக மாற்றி காட்டேஜ்கள் நடத்தி வரும் கட்டிடங்களை கண்டு சீல் வைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் தற்போது இறங்கியுள்ளது.இதுவரை உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 26 கட்டிடங்களுக்கு சீல் வைத்துள்ளது.நகராட்சி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை காட்டேஜ் உரிமையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து நீலகிரியில் உள்ள காட்டேஜ் உரிமையாளர்கள் பாதுகாப்பு கருதி ஊட்டி காட்டேஜ் உரிமையாளர்கள் சங்கம் எனும் புதிய சங்கத்தை துவக்கியுள்ளனர்.சங்கத்தின் கூட்டம் உதகை தனியார் அரங்கில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் புதியதாக சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதுகுறித்து செயற்குழு உறுப்பினர் மகேந்திரன் கூறுகையில்,
“காட்டேஜ் விவகாரத்தில் நகராட்சி நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கையால் இதனை நம்பி வாழ்க்கை நடத்தி வரும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். ஏற்கனவே இங்கு விவசாயம் நலிந்து வரும் நிலையில் இங்கு உள்ளவர்கள் சமவெளி பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.சுற்றுலாவை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வரும் நிலையில் நகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் தாங்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாகவும்,தாங்கள் இதுவரை நடத்திவரும் காட்டேஜ்களுக்கு முறையான அனுமதி பெற்றதோடு மட்டுமல்லாது தகுந்த வரிகளை செலுத்தி வருவதாகவும்,இதனால் நகராட்சி நிர்வாகம் சீல் வைக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும்,ஏற்கவே சீல் வைத்த கட்டிடங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க போவதாக கூறினார்”.
இன்று துவக்கப்பட்ட இந்த சங்கத்திற்கு தலைவராக சாதிக் அலி,துணை தலைவராகளாக பிரபு அலெக்சாண்டர் மற்றும் சம்சுதீன்,செயலாளராக பையாஸ் சேட் மற்றும் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.