June 12, 2018
தண்டோரா குழு
மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது, தேசிய தேர்வு முகமை நடத்தும் என மனித வள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள்,மருத்துவநிலை பல்கலை கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனப்படும் நுழைவு தேர்வு கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு மட்டும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு சித்தா,யுனானி உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டயமாக்கப்பட்டது.தமிழத்தில் நீட் தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
நீட் தேர்வினால் இந்த ஆண்டு 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.இதுமட்டுமின்றி இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருந்தாக கூறப்பட்டது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ நடத்தி வரும் நீட் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் 2019ம் ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை நடத்தும் என மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.
மேலும்,நீட் தேர்வு இனி ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வு தொடர்பான ஆர்.டி.ஐ. கேள்விகளுக்கு மனித வள மேம்பாட்டுதுறை பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.