April 19, 2018
தண்டோரா குழு
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், மருத்துவநிலை பல்கலை கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனப்படும் நுழைவு தேர்வு கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்க உள்ளது. இதற்கிடையில், கடந்த முறை நீட் தேர்வு நடத்தப்பட்ட போது ஆடைக்கட்டுபாடு என்ற பெயரில் மாணவ, மாணவிகளிடம் நடத்தப்பட்ட சோதனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதனால் இந்த ஆண்டு தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் எந்த மாதிரியான ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்று முன்கூட்டியே வெளியிட்டுள்ளது.
அதன்படி,மாணவர்கள் வெளிர் நிற அரைக்கை ஆடைகளையே உடுத்த வேண்டும்.ஷூ அணியக் கூடாது.பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிய கூடாது.பெரிய பட்டன்கள் வைத்த ஆடைகளை அணியக் கூடாது. பேட்ஜ்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அணிந்து வரக் கூடாது. குறைந்த உயரம் கொண்ட சாதாரண செருப்பு, சாண்டல்ஸ் அணியலாம். தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு மையத்திற்குள் எடுத்து வரக் கூடாது. ஜியோமெட்ரி அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் மற்றும் இதர உலோகப் பொருட்கள் ஆகியவற்றையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும்,பெண்கள்,வளையல்,தாலி,போன்றவற்றை அணிவதற்கு தடை ஏதும் இல்லை.