June 14, 2019
தண்டோரா குழு
கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் நிலைய அதிகாரிகள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்றும், பிராந்திய மொழிகளில் பேசக் கூடாது என்றும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 9ஆம் தேதி மதுரை திருமங்கலத்தில் ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டதற்கு கட்டுப்பாட்டு அறைகள் இருந்த ரயில் நிலைய அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட மொழிப் பிரச்னையே காரணம் என கூறப்பட்டது. இதையடுத்து, இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அலுவலர், ஸ்டேஷன் மாஸ்டர் இடையே உள்ள அலுவலக தகவல் பரிமாற்றம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.பிராந்திய மொழிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் நிலைய அதிகாரிகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளி்ல் பேசுவதை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் நிலைய அதிகாரிகளும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அலுவலர்கள் ரயில் நிலைய மேலாளர்களிடையே சரியான புரிதல் ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை விளக்கமளித்துள்ளது.
ஏற்கனவே தமிழக வேலைவாய்ப்புகளை வெளி மாநிலத்தவர்கள் தட்டி செல்வதாக தமிழகம் முழுவதும் குரல் எழுந்துவரும் நிலையில், வெளிமாநிலத்தவர்கள் புரிந்துகொள்வதற்காக தென்னக ரயில்வேயில் இருந்து தமிழை நீக்கியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.