January 7, 2020
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந் தேதி மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 6 நபர்களால் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட 6 பேரில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். ஒருவர் சிறுவர் என்பதால் 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். முகேஷ், வினய் உள்பட மற்ற 4 பேருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி அவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, தீர்ப்பு வழங்கும் வரை மரண தண்டனையை நிறுத்தி வைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. இருப்பினும் 2017 ஆம் ஆண்டு மே மாதம் இந்த மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து குற்றவாளிகள் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அதை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மரண தண்டனைக்கு உள்ளான குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். அதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தள்ளுபடி செய்துவிட்டார்.
இந்த நிலையில் நால்வரின் மரண தண்டனை உறுதி செய்வது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் இறுதி கட்ட விசாரணை இன்று நடைபெற்றது. கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சதீஷ்குமார் அரோரா முன்னிலையில் இரு தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்கு நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிட வாரண்ட் பிறப்பித்தார்.