March 2, 2020
தண்டோரா குழு
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தது டெல்லி நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
டில்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். படுகாயம் அடைந்த அந்தப்பெண் 13 நாள்கள் சிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.அதில் ஒருவன்,சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பினான். முக்கிய குற்றவாளி ராம்சிங்,திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். முகேஷ், பவன்குமார், வினய், அக்ஷய் ஆகியோருக்கு டில்லி உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1 ஆம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்களை தாக்கல் செய்ததால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது. இதற்கிடையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். அதனை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதை எதிர்த்து வினய் சர்மா, தனது வழக்கறிஞர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை தொடர்ந்து நான்கு குற்றவாளிகளுக்கும் எதிராக மரண தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் புதிய தேதியை வெளியிட்டுள்ளது. நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், குற்றவாளியின் கருணை மனு குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் இருப்பதால் நிர்பயா குற்றவாளிகளை நாளை தூக்கிலிட தடை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு தேதி நிர்ணயிக்கப்படும் வரை 4 பேரையும் தூக்கிலிடுவது நிறுத்தி வைக்கப்படுவதாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. நிர்பயா குற்றவாளிகளுக்கு மூன்றாவது முறையாக தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.