May 24, 2018
தண்டோரா குழு
கேரளாவில்,’நிபா’ வைரஸ் பாதிப்பு இருப்பதால்,நான்கு மாவட்டங்களுக்கு செல்வதை,தற்காலிகமாக தவிர்க்கும்படி,கேரள சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு,மலப்புரம்,வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நிபா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து நிபா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு மத்தியக் சுகாதாரத்துறைக் குழு கேரளா மாநிலத்திற்கு விரைந்து அங்கு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதற்கிடையில்,கர்நாடக மாநிலம் மங்களூரில் இருவருக்கும்,கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும்,நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மூவரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.அவர்கள்,தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,கேரள அரசு நிபா வைரஸ் குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.இந்நிலையில் கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,பிறபகுதிகளைச் சேர்ந்தோர், கேரளாவின் கோழிக்கோடு,மலப்புரம்,கோட்டயம் மற்றும் கேரளா அருகே உள்ள,கர்நாடகாவின் மங்களூரு ஆகிய மாவட்டங்களுக்கு செல்வதை,தற்காலிகமாக தவிர்க்கும்படி,கேரள சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.