March 27, 2019 தண்டோரா குழு
நாடாளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதியான ஏழை குடும்பங்களுக்கு, மாதம், 6,000 உதவி தொகை திட்டத்தை செயல்படுத்த முடியாது என கூறிய நிதி ஆயோக் துணைத்தலைவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
17-வது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி மக்களை கவர்வதற்காக பல்வேறு வாக்குறுதிகளை வாரி இறைத்து கொண்டு இருகின்றனர். இந்த வரிசையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு சவால் விடும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் வாக்குறுதிகளில் அனைவராலும் மிகவும் பேசப்பட்டவை காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், ஐந்து கோடி ஏழை குடும்பங்களுக்கு, மாதம், 6,000 என, ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற ராகுல் காந்தி, இதன் மூலம், நாடு முழுவதும், 25 கோடி பேர் பயனடைவர் என குறிப்பிடிருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் வாக்குறுதிகள் குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகள் எழுந்தன, இவ்வேளையில் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதியான ஏழை குடும்பங்களுக்கு, மாதம், 6,000 உதவி தொகை திட்டத்தை செயல்படுத்த முடியாது அது சாத்தியமற்றது என நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியிருந்தார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
நிலவை பிடித்துக் கொடுப்போம் என்ற பழைய வாக்குறுதி பாணியில், காங்கிரஸ் தலைவர் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். அது, பணி மனப்பான்மைக்கு எதிராக அமைவதுடன், நிதி ஒழுங்குமுறையை சிதற செய்துவிடும். இதன் செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகவும், பட்ஜெட்டில் 13 சதவீதமாகவும் இருக்கும். இத்திட்டத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. காங்கிரசின் முந்தைய கோஷங்களுக்கு ஏற்பட்ட கதிதான் இதற்கும் ஏற்படும் என அவர் குறிப்பிடிருந்தார்.
இச்சூழலில் நிதி ஆயோக் துணைத்தலைவரின் இந்த கருத்து தேர்தல் நடைத்தை விதியை மீறியது என குறியுள்ள தேர்தல் ஆணையம், இது தொடர்பாக 2 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமாருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.