December 3, 2018
தண்டோரா குழு
நாளை முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்த நிலையில், நீதிமன்றத்தின் யோசனையின் பேரில் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக ஜாக்டோ – ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக ஜாக்டோ ஜியோ அறிவித்திருந்தது. இதற்கிடையில், ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் லோகநாதன் என்பவர் மனுத்தாக்கல் செய்யதிருந்தார். அம்மனுவில், கஜா புயல் பாதிப்பு, அரையாண்டு தேர்வு சமயத்தில் போராட்டம் நடத்துவது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கேட்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் இன்று (டிச.,3) பகல் 1 மணிக்கு இந்த அவசர வழக்கை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணைக்கு வந்த போது டிசம்பர் 10 வரை போராட்டத்தை ஒத்திவைக்க முடியுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் பகல் 1.30 மணிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று டிச.,10 வரை தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைப்பதாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து, ஜாக்டோ ஜியோ ஊதிய விவகாரம் தொடர்பாக கடந்த முறை பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள்உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், ஒரு நபர் கமிஷனின் பரிந்துரையையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.