February 20, 2020
தண்டோரா குழு
இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2 படப்பிடிப்பில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு கமல் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
”இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து என் குடும்பத்தில் நடந்த விபத்தாக கருதுகிறேன். சினிமாவில் பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற விபத்து இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும். சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு இல்லாதது அவமானமாகும். நான் நூலிழையில் உயிர்பிழைத்தேன். 4 நொடிகளுக்கு முன்பு வரை நான் அங்கு தான் இருந்தேன்.
இரண்டு நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பில் இணைந்த கிருஷ்ணா இன்று உயிருடன் இல்லை. சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு கூட காப்பீடு இருக்க வேண்டும் என்ற நிலையை எய்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.