February 13, 2018
தண்டோரா குழு
போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி பினு, இன்று அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனரிடம்சரணடைந்து வாக்குமூலம் அளித்துள்ளான்.
கடந்த பிப்.,6 ம் தேதி சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள மலையம்பாக்கம் பகுதியில் லாரி செட் ஒன்றில் 75க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன்இணைந்து பினு பிறந்த நாள் கொண்டாடினான். அப்போது, இது குறித்து தகவலறிந்த போலீசார், ரகசியமாக அப்பகுதியை சுற்றி வளைத்து 75 ரவுடிகளை கைது செய்தனர். எனினும்,பினு மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் தப்பி சென்றனர். இதனையடுத்து 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தப்பியோடியவர்களை தேடி வந்தனர். அவர்களை சுட்டு பிடிக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், பினு அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனரிடம் இன்று சரணடைந்தான். அவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது, நான் சென்னை சூளைமேட்டில் பிறந்து வளர்ந்தேன். எனக்கு 50 வயதாகிறது. சர்க்கரை நோய் உள்ளது. கரூரில் தான் தலைமறைவாக இருந்தேன். நான்அங்கிருந்தது எனது தம்பிக்கு மட்டுமே தெரியும். திருந்தி வாழ வேண்டும் என்பதற்காக தான் 3 ஆண்டாக தலைமறைவாக தான் இருந்தேன். எனது தம்பி அழைத்ததால் தான் சென்னையில் பிறந்த நாள் கொண்டாட வந்தேன். அப்போது கூட இதனை ஏன் ஏற்பாடு செய்தாய் என தம்பியிடம் கேட்டேன். பிறந்த நாள் கொண்டாடிவிட்டதும் சென்றவிடலாம் என எனது தம்பி கூறினான். பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்து கிளம்பும் நிலையில் போலீசார் வந்தனர். எங்கு சென்றாலும் போலீசார் என்னை துரத்தினர். இதனால் வேறு வழியில்லாமல் சரணடைந்தேன். நீங்கள் நினைப்பது போல் நான் பெரிய ரவுடி இல்லை. என்னை மன்னித்து கொள்ளுங்கள். இவ்வாறு அவன் கூறியுள்ளான்.