December 11, 2019
தண்டோரா குழு
மது, ஆண்ட்ராய்டு செல்போன் என இந்த இரண்டையும் ஒழித்துவிட்டால், குற்றச்செயல்களை பெருமளவு குறைக்க முடியும் என கோவை கே.ஜி மருத்துவமனை தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பக்தவத்சலம் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக கோவை கே.ஜி மருத்துவமனை தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பக்தவத்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, கொன்ற வழக்கில், கைதான நான்கு பேர், சமீபத்தில் போலீசுடன் நடந்த மோதலில் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இந்த 4 பேருமே குற்றவாளிகளா? இதில் யாரேனும் ஒருவர் நிரபராதியா? என தெரியாது. என்கவுண்டர் மூலம் 4 குடும்பம் அனாதையாகி விட்டது. குடும்ப தலைவனை 4 குடும்பம் இழந்துவிட்டது. இந்த 4 குடும்பத்துக்கும் நிவாரணம் அளிப்பது யார்? பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை தப்பா, சரியா? என்ற பெரிய விவாதம் ஓடுகிறது.
குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை, பல ஆண்டுகாலம் சிறையில் அடைத்து, சாப்பாடு போட்டு, அவரை காப்பதற்கு, அரசுக்கு பல லட்சம் ரூபாய் வீணாக செலவாகிறது. இதை தவிர்க்கவே, தெலுங்கானா போலீசார் முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் என்ற பேச்சும் எழுகிறது. நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 7 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். தவறு செய்வது மனிதனின் இயற்கை. அதை, தெரிந்தே செய்தால், அந்த தவறுக்கு, அதிக தண்டனை அளிக்கவேண்டும். இதில், மாற்றுக்கருத்து இருக்க முடியாது. தவறு செய்ய தூண்டுவோருக்கும் தண்டனை உண்டு.நடுரோட்டில் நின்றுகொண்டு, ஒருவர், அரிவாளுடன், வருவோர், போவோரை மிரட்டுகிறார். பெண்களை வழிமறித்து நகை பறிக்கிறார். ஆனால், ஒருவர்கூட தட்டிக்கேட்க முன்வரவில்லை. அருகில் சென்றால், நம்மை வெட்டிவிடுவார் என்ற அச்சத்தில் யாருமே பக்கத்தில் போகவில்லை. இந்த காட்சி வீடியோவில் பதிவாகி, வெளிவருகிறது. அட்டகாசம் செய்யும் அந்த நபர், நம் வீட்டு பெண்ணிடம் இப்படி நகை பறித்தால், நாம் சும்மா இருப்போமா? நம் ரத்தம் துடிக்காதா? எப்படியாவது நம் வீட்டு பெண்ணை காப்பாற்ற வேண்டும் என முயற்சி செய்வோம்.ஆனால், இது, வேறு ஒரு பெண்தானே? என அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் செல்கிறோம். இந்த நிலை என்று மாறுமோ, அன்றுதான் நம் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். நம் தேசத்தை பாதுகாக்க, ராணுவ வீரர்கள் எல்லையில் கடும் பனியாற்றுகிறார்கள். சீனா, பாகிஸ்தான் எல்லையில் இரவு, பகலாக காத்துக்கிடக்கிறார்கள். தன் உயிரை கொடுக்கவும், எதிரியின் உயிரை எடுக்கவும் துணிகிறார்கள். காரணம், நம் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள எப்போதுமே இருமடங்கு தயாராக இருக்கவேண்டும். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த பிறகும்கூட, இம்சையை, அகிம்சையால் மட்டுமே வெல்லவேண்டும் என்றார் மகாத்மா. ஆனால், இன்று நிலைமை வேறு. இம்சையை, இம்சையால்தான் எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதைத்தான், முள்ளை, முள்ளால் எடுக்கவேண்டும் என்றார்கள்.நம் நாட்டில், கடந்த 15 ஆண்டுகளாக, பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருகிறது. ”சர்க்கரை நோயின் தலைநகரம்” இந்தியா என்று கூறுவார்கள். ஆனால், இன்று, ”ரேப் கேஸ்”களின் தலைநகரம் என்றாகிவிட்டது. இது, வேதனையிலும் வேதனை. என்கவுண்டர் நடந்தாலும், பாலியல் குற்றச்செயல் அதிகரிக்கத்தான் செய்கிறது. பலர், என்கவுண்டர் பற்றி அறியாமல், பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களும் அதிகரிக்கிறது.
இதற்கு மூலக்காரணம், இரண்டு விஷயம். ஒன்று – டாஸ்மாக் சரக்கு, இன்னொன்று – ஆண்ட்ராய்டு செல்போன். இவை இரண்டும் நாட்டை கெடுக்கும் இரட்டையர்கள். டாஸ்மாக் மட்டுமின்றி, மது, எந்த ரூபத்தில் வந்தாலும் அதை தடைசெய்ய வேண்டும். டாஸ்மாக் சரக்கு காரணமாக, ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் சாலைவிபத்தில் உயிரிழக்கிறார்கள். மது, ஆண்ட்ராய்டு செல்போன் என இந்த இரண்டையும் ஒழித்துவிட்டால், குற்றச்செயல்களை பெருமளவு குறைக்க முடியும்.
பிரதமர் மோடி எடுத்து வரும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பார்த்து, கனடா நாட்டில் இருந்து ஒரு கட்டுரை வெளிவருகிறது. அதில்,”இந்தியர்களுக்கு ரோஷம் வந்துவிட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற நடவடிக்கை மூலம், அந்நிய ஊடுருவலை முடித்துவைத்தவர் பிரதமர் மோடி.காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால், இளம்தலைமுறையினருக்கு நல்லதை சொல்லிக்கொடுக்க ஆள் இல்லை. கெட்டவை பற்றி தெரிந்துகொள்ள பல வாய்ப்புகள் உருவாகியுள்ளது. பக்கத்து வீட்டு பெண்ணுக்கு இன்று ஏற்படும் பாதிப்பு, நாளை நம் வீட்டு பெண்ணுக்கு ஏற்படலாம். பெண்கள் பாதுகாப்புக்கு அனைவருமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இது, நமக்கு வந்த பாதிப்பு அல்ல, என ஒதுங்கிச்செல்லக்கூடாது. மற்றவர்கள் கஷ்டத்தை, நம் கஷ்டமாக எண்ணினால், நாட்டில் கொடூர செயல்கள் எதுவும் நடக்காது.
இவ்வாறு டாக்டர் பக்தவத்சலம் கூறியுள்ளார்.