September 21, 2019 தண்டோரா குழு
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார். நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆக இருந்த வசந்தகுமார், மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவித்தார். அதன்படி, இந்த இரண்டு தொகுதிகளுக்கும் அக்., 21 தேதி தேர்தல் நடத்தப்படுவதாகவும், வாக்கு எண்ணிக்கை அக்., 24 தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 23 தேதி முதல் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, இடைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, நாங்குநேரி தொகுதிக்கு நாளை மறுநாள் முதல் விருப்பமனுக்களை காங்கிரஸ் கட்சி பெற உள்ளதாக தெரிவித்தார்.