March 17, 2020
கோவை நவக்கரை அருகே உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த வாழைகளை சேதப்படுத்தியது.
கோவை நவக்கரை அடுத்த மாவூத்தம்பதி ஆழமரம் வடக்கு தோட்டம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் சுமார் 2 ஏக்கர் பரப்பில் வாழை பயிறிட்டுள்ளார். இவரது தோட்டத்திற்குள் நேற்று அதிகாலை 4 மணியளவில் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த வாழைகளை சேதப்படுத்தியது. வாழைக்காயுடன் இருந்த சுமார் 15 வாழைகளும், 5 மாதம் வயதுடைய சுமார் 50 வாழைகளை காட்டு யானை சாப்பிட்டு சென்றதாகவும் தோட்ட உரிமையாளர் தெரிவித்தார். மேலும் அங்கிருந்து அருகே உள்ள சாமியப்பக்கவுண்டர் தோட்டத்தில் சென்ற யானை அங்கிருந்த 2 தென்னை மரத்தை வேரோடு சாய்த்தது. பின்னர் அப்பகுதி விவசாயிகள் பட்டாசுகள் வெடித்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
உணவு தேடி வரும் காட்டு யானைகள் அடிக்கடி மாவூத்தம்பதி இரயில்வே தண்டவாலம் அருகே முகாமிடுவதாகவும், அதிகளவு யானைகள் மலைஓர பகுதிகளில் இறங்குவதாகவும் தெரிவித்த விவசாயிகள் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும், யானைகளுக்கு தேவையான பயிர்களை வன எல்லைகளிலேயே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.