February 27, 2018
தண்டோரா குழு
நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி சந்தேகம் எழுப்பியுள்ளார்.
துபாயில் நடைபெற்ற திருமணம் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். முதலில் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார் என்று கூறப்பட்டது. பின்னர் உடற்கூறு ஆய்வில் அவர் குளியல் தொட்டியில் விழுந்து இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரின் உடலில் ஆல்கஹால் படிமங்கள் இருந்ததாகவும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டது.
நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டுள்ள நிலையில் அது குறித்து சில கேள்விகளை சுப்ரமணியம் சுவாமி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“ஸ்ரீதேவி மரணம் குறித்து முரண்பட்ட தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவர் எப்போதும் உடல்நலனில் அக்கறை காட்ட கூடியவர். அவருக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. அவரை வலுக்கட்டாயமாக ஆல்கஹால் குடிக்க வைத்திருக்கலாம். யாராவது தள்ளிவிடாமல் அல்லது மூச்சை நிறுத்த முயற்சிக்காதவரை, தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒருவர் மரணமடையும் வாய்ப்பு இல்லை. இதையெல்லாம் நிரூபிக்க சிசிடிவி காட்சிகள் இல்லை.
மருத்துவ பரிசோதனைகள் நடக்கும் முன்பே மாரடைப்பால் மரணம் என கூறியது ஏன்? இதெல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா? என்னிடம் கருத்து கேட்டால் இதைக் கொலை என்றுதான் கூறுவேன்” என்று கூறினார்.
மேலும்,ஸ்ரீதேவிக்கும், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கும் இடையே சட்டவிரோதமான உறவு இருந்ததாகவும், அதனால் இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி விசாரிக்க வேண்டும் என்றும் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.