February 27, 2020
தண்டோரா குழு
பீட்சா டெலிவரியின் போது ஏற்பட்ட பிரச்சனையால், சினிமா நடிகையின் எண்ணை ஆபாச இணையதளங்களில் பதிவிட்டதாக டாமினோஸ் பீட்சா உணவக டெலிவரி ஊழியரை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தில் நடித்திருப்பவர் நடிகை காயத்ரி ராவ். இவர் தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர். தற்போது சென்னை தேனாம்பேட்டை சீதாம்மாள் காலணியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில் தனக்கு பல்வேறு எண்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதாகவும், அனைவரும் ஆபாசமாக பேசி , பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக கூறி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சக்திவேல், சுந்தரம் சந்திரபோஸ் மற்றும் மகேஸ்வரன் ஆகியோரை, தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்தனர். நடிகை காயத்ரி ராவின் நம்பரை வாட்ஸ் அப்பில் பதிவிட்ட நபர் யார் என போலீசார் விசாரித்தபோது, டாமினோஸ் பீட்சா டெலிவரி செய்யும் பரமேஸ்வரன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து தேனாம்பேட்டை போலீசார் பரமேஸ்வரனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பீட்சா டெலிவரியின்போது பரமேஸ்வரனுக்கும், நடிகை காயத்ரி ராவிற்க்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆத்திரத்தில் நடிகை காயத்ரி ராவின் நம்பரை, வாட்ஸ் அப் க்ரூப்பிலும், ஆபாச இணைய தளங்களிலும் பழிவாங்கும் நோக்கத்தில் பதிவிட்டதாக, போலீசாரின் விசாரணையின்போது, பரமேஸ்வரன் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, டாமினோஸ் பீட்சா நிறுவனத்திடம் கேட்ட போது பரமேஸ்வரனை பணி நீக்கம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.