July 5, 2018
தண்டோரா குழு
நடத்துனர் இல்லாத போக்குவரத்து சேவை பலனளிக்காது என சி.ஐ.டி.யு தமிழ்நாடு அரசு போக்குவர்த்து ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை நல்லாயன் மண்டபத்தில் நடைபெற்ற சி.ஐ.டி.யு மண்டல மாநாட்டில் சி.ஐ.டி.யு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் மாநில கலைவர் சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“மானிய கோரிக்கையில் போக்குவரத்து கழகத்தை மேம்படுத்தவோ,ஊழியர்களின் பிரச்சனை குறித்தோ போக்குவரத்துதுறை அமைச்சர் பேசவில்லை.தொழிலாளர்கள் நிலுவை தொகை ஐந்தாயிரம் கோடியில் இருந்து 6 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும்,நடத்துனர் இல்லாத பேருந்து சேவையை ரத்து செய்ய வேண்டும் என்றும்,நடத்துனர் இல்லாத பேருந்து சேவை அடுப்பில்லாமல் சமைப்பதற்கு சமம் என சாடினார்.தமிழக அரசு போராடுபவர்கள் மீது கடுமையான அடக்குமுறையை பின்பற்றுவதாகவும் அதனை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
சிக்கனம் என்ற பெயரில் நடத்துனர் இல்லா பேருந்து சேவையை துவக்கியுள்ளனர்.ஆனால் இந்த சேவை பயனளிக்காது.நாளை சி.ஐ.டி.யு சங்க ஊழியர்கள் பேருந்துகளை இயக்குவதற்கு முன் கையில் நடத்துனர் இல்லா சேவையை ரத்து செய்ய வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பிய பின்னர் பணிக்கு செல்வர் எனவும் தெரிவித்தார்.
தற்போதைய மோட்டார் வாகன சட்டத்தின் படி நடத்துனர் இல்லாமல் பேருந்துகளை இயக்க முடியாது.மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வரும் போது கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு வலுத்தது” எனவும் தெரிவித்தார்.