May 18, 2019 தண்டோரா குழு
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா – தேர்தல் ஆணையர் அசோக் லவாசா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின், மூவர் குழுவில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் உள்ளனர். தேர்தல் விதிமுறை புகார்கள் குறித்து இந்த மூவர் குழுதான் முடிவெடுக்கும். புகார்கள்குறித்து இந்த மூவர் குழு ஒரு மனதாக முடி வெடுக்க வேண்டும் என்பது தான் விதிமுறை. அப்படி இல்லாத பட்சத்தில் பெரும்பான்மை முடிவே இறுதியானது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா மீதான தேர்தல் விதி மீறல் புகார்களை விசாரித்ததில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இருவரும் தேர்தல் விதிகளை மீறினர் என்று அசோக் லவாசா தெரிவித்தார். மோடி, அமித் ஷாவுக்கு எதிரான 6 புகார்களை தேர்தல் ஆணையம் விசாரித்த போது எனது கருத்தை சுனில் அரோரா ஏற்கவில்லை என்றும், எனது கருத்துகள் கேட்கப்படாததால் ஆணைய கூட்டங்களில் பங்கேற்பது அர்த்தமற்றது என்று அசோக் லவாசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோராவுக்கு, ஆணையர் அசோக் லாவாசா மே.4 அன்று எழுதியுள்ள கடிதத்தில்,
சிறுபான்மை முடிவுகள் இறுதி செய்யப்படாத போது, முழு ஆணைக்குழுவின் கூட்டத்தில் பங்கேற்கமால் நான் விலகி இருக்க நிர்பந்திக்கப்படுகிறேன். ஆணைக்குழு கூட்டத்தில் நான் கலந்துகொள்வது அர்த்தமற்றதாகிறது. என்னுடைய சிறுபான்மையான முடிவுகள் பதிவு செய்யப்படாமல் போகிறது.
என்னுடைய கருத்துகள் பதிவு செய்யப்படாத போது நான் ஏன் ஆணையக்குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கடிதத்தை தொடர்ந்து, சுனில் அரோரா லவாசாவுடன் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.