July 9, 2021
தண்டோரா குழு
தேசிய அளவில் கொண்டாடப்படும் ‘வன மகோத்சவத்தை’ முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக ஜூலை முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் 2 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்தனர்.
இந்தியா முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் ‘வன மகோத்சவம்’ (வன திருவிழா) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாட்டின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் இயக்கமான காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் ஜூலை 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டது.
*650 ஏக்கரில் 2 லட்சம் மரங்கள்*
அதன்படி, கோவை, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தென்காசி உட்பட 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுமார் 650 ஏக்கர் விவசாய நிலங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டது.
சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக, தேக்கு, செம்மரம், சந்தனம், மகோகனி, வேங்கை, மலை வேம்பு போன்ற பண மதிப்புமிக்க மரங்கள் நடப்பட்டன. காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்கள் விவசாய நிலங்களின் மண் மற்றும் நீரின் தரத்தை ஆய்வு செய்து மண்ணுக்கேற்ற மர வகைகளை பரிந்துரை செய்தனர்.
இதற்கு முன்பு வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி ஆகியோரின் நினைவு மற்றும் பிறந்த நாட்களில் இதேபோல், லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுத்தது. இவர்கள் மூவரும் ஈஷாவின் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளில் ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்து வழிகாட்டிகளாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
காவேரி கூக்குரல் இயக்கமானது காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் சத்குரு அவர்களால் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தின் மூலம் கடந்த ஆண்டு மட்டும் 1.1 கோடி மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டுள்ளனர்.
இவ்வியக்கத்தின் மூலம் நடப்படும் அனைத்து மரங்களும், விவசாய நிலங்களில் நடப்படுவதால், அவற்றை விவசாயிகள் நன்கு பராமரித்து வருகின்றனர். இதன்மூலம், தமிழ்நாட்டில் வனப் பகுதிக்கு வெளியில் இருக்கும் இடங்களில் (Trees outside forest) லட்சக்கணக்கில் மரங்களை நட்டு பசுமை பரப்பை அதிகரிப்பது மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது போன்ற பணிகளில் ஈஷா முக்கிய பங்காற்றி வருகிறது.
*ஆன்லைனில் விவசாய கருத்தரங்கு*
மரம் நடும் நிகழ்வுகளுடன் சேர்த்து சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் லாபகரமான வேளாண் காடு வளர்ப்பு முறையை எப்படி உருவாக்குவது என்பது குறித்த சிறப்பு ஆன்லைன் கருத்தரங்கம் ஜூலை 7-ம் தேதி நடைபெற்றது.
இதில் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வன கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் டீன் பார்த்திபன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் கே.எம்.சிவக்குமார், சுரேஷ் டிம்பர் நிறுவனத்தின் உரிமையாளர் சுரேஷ் கண்ணன், ஷோபா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹரீஷ் பாபு மற்றும் முன்னோடி விவசாயிகள் செந்தில் குமார், அமர்நாத் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர்.