November 27, 2021
தண்டோரா குழு
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று தேசிய உறுப்பு தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினம் கடந்த 10 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தேசிய உறுப்பு தான தினத்தின் முக்கிய நோக்கமாக மக்களிடையே விழிப்புணர்வை பரப்புவதாகும். இதன் அடிப்படையில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில் இந்த ஆண்டும் தேசிய உடல் உறுப்பு தான தினம் கடைபிடிக்கப்பட்டது.
தேசிய உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, பொது மக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் உருவாக்க பி.எஸ்.ஜி மருத்துவமனை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக,
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் இயக்குனர்எஸ். செந்தில் வளவன் கலந்து கொண்டு நன்கொடையாளர் குடும்பத்தை கவுரவித்து சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் கோயம்புத்தூர்ரேபிட் ஆக்சன் போர்ஸ் கமாண்டன்ட் வி.ஜெய மாதவன், ரேபிட் ஆக்சன் போர்ஸ் துணை கமாண்டன்ட்
டாக்டர் அனுதாமா பிரதீப், பி.எஸ்.ஜி மருத்துவமனை மெடிக்கல் டூரிஸம் மேலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற உறுப்பு தானம் சமூக தேவையா? அல்லது சேவையா? அல்லது பொறுப்பா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.
“உறுப்பு தானம் எனது சமூகப் பொறுப்பு” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், நன்கொடையாளர்கள், மருத்துவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதி மொழி ஏற்று கொண்டனர்.