February 21, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி என்னுமிடத்தில் பவானி ஆற்றங்கரையோரம் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பத்தாவது யானைகள் நலவாழ்வு முகாம் நேற்றுடன் முடிவடைந்தது.
தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் இருந்து 31 யானைகளும் புதுச்சேரியில் இருந்து 2 யானைகளும் என மொத்தம் 33 யானைகள் பங்கேற்றன.இந்த முகாம் ஒரு மண்டலம் என்ற கணக்கீட்டில் 48 நாட்கள் நடைபெற்று முடிந்து நேற்றுடன் முடிவடைந்தது.
இதற்காக நிறைவு விழா பூஜைகள் முடிந்து இந்து அறநிலையத்துறை ஆணையர் ஜெயா யானைகளுக்கு பழங்களை வழங்கி முகாமை முடித்து வைத்தார்.இவ்விழாவில் தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் மற்றும் எஸ்.பி வேலுமணி அகியோர் கொடி அசைத்து யானைகளை வழி அனுப்பி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் ஜெயா மற்றும் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் ,
இந்த 48நாள் புத்துணர்வு முகாமில் யானைகளுக்கும்,அதன் பாகன்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும்,இந்த ஆண்டு முதல்முறையாக அனைத்து யானைகளுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் அனைத்து யானைகளும் எந்த ஒரு நோய் பாதிப்புமின்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த முகாமிற்கு 1.கோடியே 50 லட்சத்து 79 ஆயிரம் செலவிடப்பட்டதாக ஆணையர் ஜெயா தெரிவித்தார்.
இதனையடுத்து யானைகளை அதன் சொந்த ஊர்களுக்கு மீண்டும் அழைத்து செல்ல லாரிகளில் அவற்றை ஏற்றும் பணி துவங்கியது.ஆனால் இதுவரை கூட்டமாக பிற யானைகளோடு பழகியபடி நட்போடு ஒன்றாக குளித்து, நடைபயிற்சி மேற்கொண்டு, உண்டு களித்த யானைகள் முகாமில் இருந்து வெளியேற விருப்பமின்றி தவிக்கின்றன. சில யானைகள் பாகன்களின் உத்தரவுகளை ஏற்காமல் லாரிகளில் ஏற மறுத்து அடம் பிடித்தன.
இதுவரை தனித்திருந்த நிலையில், முகாமில் தன் இனத்தை சேர்ந்த பிற யானைகளோடு கூட்டமாக ஒரே இடத்தில் வனம் சார்ந்த பகுதியில் தங்கியுள்ள காரணத்தால் அவையனைத்தும் முகாமின் 48 நாட்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டன.மேலும் வலுக்கட்டாயமாகவே சில யானைகளை லாரிகளில் ஏற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.