July 4, 2018
தண்டோரா குழு
தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் பயணிகள் வசதிக்காக தாராபுரம் தலைமை தபால் அலுவலகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் இன்று(ஜூலை 4) தொடங்கப்பட்டுள்ளது.
தாராபுரம் தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்ற ரயில் டிக்கெட் முன்பதிவு மையத் துவக்க விழாவில் மக்களவை உறுப்பினர் திரு எஸ்.செல்வகுமார சின்னையன்,மேற்கு மண்டல தபால் துறை ஜெனரல் மரியம்மா தாமஸ்,தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் திரு யு.சுப்பாராவ்,முதுநிலை வணிக மேலாளர் விஜூவின் ஆகியோர் பங்கேற்றனர்.
தாராபுரம் பகுதியில் மக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமெனில் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழனிக்கும்,சுமார் 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்பூருக்கும் சென்று வந்தனர்.இதனால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யவும்,ரயிலில் பயணம் செய்யவும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு மக்களவை உறுப்பினர் திரு செல்வகுமார் சின்னையன்,தாராபுரம் மக்களின் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு அமைக்க தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து தாராபுரம் தலைமை தபால் அலுவலகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.அதன்பேரில் தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் தாராபுரம் தலைமை தபால் அலுவலகத்தில் ரயில் டிக்கென் முன்பதிவு மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் ஏற்கனவே இதுபோன்ற தபால் அலுவலக ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் பள்ளிபாளையம் மற்றும் ராசிபுரம்(நாமக்கல் மாவட்டம்), பாப்பநாயக்கன்புதூர்(கோவை மாவட்டம்),காந்திநகர் (திருப்பூர் மாவட்டம்),கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம்) செயல்பட்டு வருகிறது.புதிதாக துவங்கப்பட்டுள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு மையத்தில் பயணிகள் அனைத்து ரயில் நிலையங்களுக்கு செல்ல டிக்கெட் பதிவு செய்யலாம்.அதேபோல பதிவு செய்த டிக்கெட்களை தபால் அலுவலகத்தில் ரத்து செய்யலாம்.
மேலும்,அனைத்து வேலை நாள்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் செயல்படும்.இந்த ரயில் டிக்கெட் முன்பதிவு மையத்தினை தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு பயனடையலாம் என தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.