April 2, 2019 தண்டோரா குழு
தென் மாநிலங்களை பாரதிய ஜனதா ஒருபோதும் கவனிக்காமல் விட்டதில்லை என அமித்ஷா பேசியுள்ளார்.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் இன்று மூன்று இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசாரத்தில் பாஜக வேட்பாளார்கள் தமிழிசை சவுந்தரராஜனை, எச்.ராஜா மற்றும் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். முதலில் தூத்துக்குடி மக்களவை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
அதிமுக, பாமக, தேமுதிக என வலிமையான கட்சிகள் இணைந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளித்து அவர்களை பாஜக பெருமைப்படுத்தியுள்ளது. எங்கள் கூட்டணி பெரும் வெற்றி அடையும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற வையுங்கள். பாகிஸ்தான் பிடியில் சிக்கி பத்திரமாக மீட்கப்பட்ட அபிநந்தன் தமிழகத்தை சேர்ந்தவர்.தமிழிசை சவுந்தரராஜனுக்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனை நினைத்து இந்த கூட்டத்தில் உரையாற்றுகிறேன்.புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்கவே பாகிஸ்தானுள் புகுந்து தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. காஷ்மீரை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
14வது நிதிக்குழு மூலம் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் வருங்காலங்களில் நிதியுதவி மேலும் அதிகரிக்கப்படும். தமிழகத்திற்கு புதிய வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருவோம். தமிழகத்திற்கு அதிக நிதியை பாரதிய ஜனதா அரசு ஒதுக்கியுள்ளது. தென் மாநிலங்களை பாரதிய ஜனதா ஒருபோதும் கவனிக்காமல் விட்டதில்லை என அமித்ஷா குறிப்பிட்டார். ஆனால் தமிழகத்திற்கு காங்கிரஸ் போதிய நிதியை ஒதுக்கவில்லை. கனிமொழி, ஆ.ராசா, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட வேட்பாளர்களை நிறுத்தி ஊழல் கூட்டணியை எதிர்கட்சிகள் அமைத்துள்ளது. நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் மத்தியில் மீண்டும் ஏழை மக்களுக்கான ஆட்சி அமைப்போம்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.