May 23, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடியில் இன்று மீண்டும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.இதையடுத்து,போலீசார் தடியடி நடத்தியதால் பொதுமக்கள் கல்வீசி அவர்களை தாக்கினர்.போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.போராட்டகாரர்களை காவல்துறையால் தடுக்க முடியாததால்,ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 11 பேர் பலியானார்கள் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து பலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் பொதுமக்களை கண்ணீர் புகை குண்டு வீசியும் லேசான தடியடி நடத்தியும் கலைத்தனர்.
இதனைத்தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட வாகனத்தில் போலீஸ் அணிவகுப்பு நடத்தினர். 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் பொது இடங்களில் ஒன்று கூட வேண்டாம்என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர்.இந்நிலையில்,அண்ணா நகர் பகுதியில் போலீசார் – போராட்டக்காரர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. போராட்டகாரர்கள் கல்வீசி தாக்கினர். இதில், தூத்துக்குடி எஸ்.பி., மகேந்திரன் மற்றும் 10 போலீசார் காயமடைந்தனர்.
இதனால், போலீசார் துப்பாக்கிகள் மூலம் ரப்பர்குண்டுகளை வீசி தாக்கினர். இதில் தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த காளியப்பன் (22) என்ற இளைஞர் உயிரிழந்தார்.மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.அந்த பகுதியில் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.